தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நட்சத்திர நடிகராக வளர்ந்து வரும் துஷ்யந்த் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆல் பாஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தில் துஷ்யந்த், ஜனனி குணசீலன், ஜெயப்பிரகாஷ், செந்தி குமாரி, சுப்பிரமணியம் சிவா, ஆர். மோகனா, பிரசன்னா பாலச்சந்திரன், வினோதினி வைத்தியநாதன், சரத் லோகிதாஸ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தில் ராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். வடசென்னை மக்களின் வாழ்வியல் பின்னணியில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி இருக்கும் இதனை ஒன் ஸ்டெப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகனா தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், ஏ. ராஜா ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் மைதீன் பேசுகையில், ” வடசென்னையில் வாழும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினரின் வாழ்வியலை அதன் இயல்பான அம்சங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் உருவாகி இருக்கிறது.
இதில் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்களும் இடம் பிடித்திருக்கிறது இதன் காரணமாகவே படத்திற்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.