16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அறிவித்துள்ளார். டவுனிங் வீதியில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்டபோது அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது நாட்டின் எதிர்காலத்திற்கும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் முக்கியமான தருணமாக இருக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு முழுமையாக தீமையானவை என்று தாம் கருதவில்லை என்றாலும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு அவசியமானது என அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தேர்வுகள் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் அமைகின்றன என்றும், தற்போதைய சூழலில் முழுமையான கட்டுப்பாடே சரியான வழி என தமக்குத் தெளிவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தான் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு பெற்றோராகவும் இந்த விவகாரத்தை அணுகுவதாக குறிப்பிட்ட பிரதமர், குழந்தைகள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வளர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களின் பயன்பாடு குழந்தைகளின் மனநிலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணைய வழி துன்புறுத்தல்கள், அவமதிப்புகள் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சமூக ஊடக தளங்களில் காணப்படும் முடிவில்லா ஸ்க்ரோல் (Infinite Scroll) போன்ற அம்சங்கள் பயனாளர்களை நீண்ட நேரம் செயலிகளில் ஈடுபட்டு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகளின் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக குழந்தைகள் கல்விசார் நடவடிக்கைகள், வாசிப்பு பழக்கம், நண்பர்களுடன் நேரடியாக பழகுதல் மற்றும் போதுமான தூக்கம் போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாகவும் பிரதமர் எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், சமூக ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வயது சரிபார்ப்பு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என அரசியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்கள் கருதுகின்றன.