தமிழக முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்துக்கு வருகைதந்துள்ளார். தமிழ்நாட்டுக்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு, சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
இதன்போது உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித் குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான ‘மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண’ (Michelin Le Mans Cup) பந்தயத் தொடரின் 5ஆவது சுற்று இலண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 44 பந்தய கார்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்டப் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார்.
நேற்று இரவு 9 மணியளவில் பச்சைக் கொடி அசைத்து போட்டியை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது அங்கு முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள் சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்த காட்சி, தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில் சர்வதேசப் பந்தய வீரராகக் களமிறங்கிய நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் ‘Ajith RedAnt by Virage’ அணியின் சார்பில் போட்டியிட்டார்.
அவர் 16ஆம் எண் கொண்ட அதிநவீன ‘Ligier’ பந்தய காரை இயக்கி பங்கேற்றார். இவருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் (Romain Vosniak) இணை காரோட்டியாகப் பங்கேற்றார். 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சவாலான லே மான்ஸ் பந்தயத்தில், அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது அழைப்பை ஏற்று வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
நடிகை ராதிகாவுடன் இங்கிலாந்தில் திரிஷா எடுத்த புகைப்படங்கள் முன்னதாக வெளியான நிலையில், நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரில் நடிகை திரிஷா பந்தயத் தளத்துக்கு நேரில் வருகை தந்தார். பார்வையாளர் திடலுக்கு வந்த அவர், முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அமர்ந்து பந்தயத்தை நேரில் கண்டு ரசித்தார்.


