செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எனது குழந்தை பயங்கரவாதி | தீபச்செல்வன்

எனது குழந்தை பயங்கரவாதி | தீபச்செல்வன்

0 minutes read



தமது துப்பாக்கிகளிலிருந்து சமாதானம் பூக்கிறதென
அவன் சொல்லும்போது
சமாதானம் எப்படியிருக்கும் என
நான் கேட்கவில்லை

தமது கண்களிலிருந்து பாதுகாப்பு பிறக்கிறதென
அவன் சொல்லும்போது
பாதுகாப்பை எப்படி உணர்வதென
நான் கேட்கவில்லை

எமது நிலத்தை தாம் ஆக்கிரமிக்கவில்லையென
அவன் சொல்லும்போது
புத்தர்சிலைகளும் இராணுவமுகாங்களும்
எப்படியானவையென
நான் கேட்கவில்லை

நாம் அனைவரும் ஒருநாட்டுப் பிரஜைகளென
அவன் சொல்லும்பொழுது
சகோதரர்களை நீ எப்படி நடத்துவாய் என
நான் கேட்கவில்லை

யாரும் காணாமல் போகவில்லையென
அவன் சொல்லும் பொழுது
சரணடைந்தவர்கள் எங்கு சென்றனரென
நான் கேட்கவில்லை

எமது பெண்கள் எவரையும்
கற்பழித்துக் கொல்லவில்லையெனவும்
இளைஞர்கள் எவரையும்
நிர்வாணமாக இருத்தி பின் பக்கமாக
தலைகளில் சுடவில்லையெனவும்
அவன் சொல்லும்பொழுது
அந்த நிலத்தில் குருதி எப்படி கொட்டியதென
நான் கேட்கவில்லை

யாரையும் தாம் கொல்லவில்லையெனவும்
கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளெனவும்
அவன் சொல்லும் பொழுது
நான் சொன்னோன்
எனது குழந்தை ஒரு பயங்கரவாதியென.

தீபச்செல்வன்

(எனது குழந்தை பயங்கரவாதி தொகுப்பிலிருந்து)

புகைப்படம் : குமணன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More