சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் தனக்கென முத்திரை பதித்து எழுதி வருபவர் திருமதி ஜெயந்தி சங்கர். கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை, நாவல் என இவரின் இலக்கியம் விரிகிறது.
தமிழக மதுரையில் 1964இல் பிறந்தவர். தற்போது சிங்கப்பூரில் வாழ்கிறார்.
மதுரை ஹிந்து சினீயர் செகண்டரி பள்ளி, சிதாலக்ஸ்மி ராமசாமி கல்லூரி, பெசண்ட்தியாசோபிகல் பள்ளி ஆகியவற்றில் பயின்று இன்று பி.எஸ் சி பிசிக்ஸ் பட்டதாரியாகவும், பகுதி நேர மொழிபெயர்ப்பாளராகவும், முழுநேர எழுத்தாளராகவும் நமக்குத் தெரிந்திருக்கிறார்.
நாலேகால் டாலர், பின்சீட், நியாயங்கள் பொதுவானவை, மனுஷி, திரைகடலோடி, தூரத்தே தெரியும் வான் விளிம்பு, வாழ்ந்து பார்க்கலாம் வா, நெய்தல், மனப்பிரிகை, குவியம், ஏழாம் சுவை, பெரும் சுவருக்குப் பின்னே, சிங்கப்பூர் வாங்க, ச்சிங்மிங், கனவிலே ஒரு சிங்கம், முடிவிலும் ஒன்று தொடரலாம், மிதந்திடும் சுயபிரதிமைகள், சூரியனுக்கு சுப்ரபாதம், இசையும் வாழ்க்கையும், மீன்குளம் எனப் பல சிறுகதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், நாவல், கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
இவரின் படைப்புக்களை தமிழக, சிங்கப்பூர் புலம்பெயர் சஞ்சிகைகள் வெளியிட்டு வருகின்றமையும், அனேக இணையங்களிலும் பிரசுரமாகி பலராலும் பாராட்டப்பட்டவைகளாகவும் இருப்பது கண்கூடு.அவரின் படைப்புக்கள் சில காற்றுவெளியிலும் வெளிவந்த்து குறிப்பிடத்தக்கது.
இவரின் எழுத்து வட்டம் விசாலமானது.அனைத்து விடயங்களையும் துறை போகக் கற்றுத் தெளிந்த சிந்தனையுடன் எழுதுபவர். கதைகளும், கவிதைகளும் அப்படியே. சில மொழிபெயர்ப்புக்கவிதைகளை வாசித்து பிரமித்திருக்கிறேன். அனைத்துப் படைப்புகளும் பத்திரிகை சஞ்சிகை, இணையங்களில் வெளிவந்தவையே. வாசகர்களை ஒருகணம் திரும்பிப் பார்க்கவைக்கும் திறன் இவரின் படைப்புக்களுக்கு உண்டு. போகிற போக்கில் வாசித்து தூர எறிந்து விட்டுப்போகும் சாதாரண படைப்புக்களல்ல. வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டிப்போடுபவை.
இவரின் எழுத்துக்களைத் தாங்கி அமுதசுரபி, கல்கி, கலைமகள், உயிர்மை, காலச்சுவடு, வார்த்தை, உயிர் எழுத்து, மணல்வீடு, கனவு, புதியபார்வை, இந்தியா ருடே, ஆனந்தவிகடன், அவள் விகடன், த தமிழ்ஸ் டைம்ஸ், ஊடறு, பெண்ணே நீ, அம்ருத்தா, தென்றல், வடக்குவாசல், தென்றல் முல்லை, பெட்னா, இனிய நந்தவனம், மஞ்சரி, சினேகிதி, முல்லைச்சரம், இருவாட்சி, பொங்கல் மலர், காற்றுவெளி, அநங்கம், திசையெட்டும், மலேசிய நண்பன், மக்கள் குரல், மக்களோசை, தமிழ்நேசன், இனிய உதயம், தமாரை, மௌனம், அகநாழிகை, கால கட்டம், நவீன விருட்சம், திண்னை, பதிவுகள், சமாச்சார், திசைகள், சங்கமம், தமிழோவியம், சிக்கிமுக்கு, வல்லமை, உயிரோசை, சொல்வனம், செல்லினம், வல்லினம், தங்கமீன், தமிழ்முரசு, சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச்சுடர், நாம், சிரங்கூன் டைம்ஸ், இனி என பல ஊடகங்கள் வெளிவருகின்றன. இதனால் பலரும் அறியப்பட்ட எழுத்தாளராகவும் மிளிர்கிறார்.
இந்த வகையில் ஜெயந்திசங்கருக்கு இவ்வாண்டு முஸ்தபா அறக்கட்டளையினரின் சார்பில் ‘கரிகாலன் விருது’ ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’ நாவலுக்குக் கிடைத்திருப்பது இலக்கிய உலகம் செய்த பாக்கியமாகும். தஞ்சாவூர் பல்கலைக் கழகம் வழங்கும் இவ்விருது வழங்கும் வைபவம் மார்கழி மாதம் பதினாலாம் திகதி தஞ்சாவூர் பல்கலைக் கழத்தில் நடைபெற்றதென அறியக்கூடியதாக இருக்கிறது.
அவரின் எழுத்துதிறமையை அவரின் படைப்புக்களில் காணலாம்.
அவரின் எழுத்துப்பணி மேலும் தொடர நாமும் வாழ்த்தி நிற்கின்றோம்.
முல்லைஅமுதன் | எழுத்தாளர்