1996 – ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் “மகாகவி” மாதஇதழ் தொடங்கப்பட்டது! அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. திட்டமிடாத ஒன்று அது என்றுதான் சொல்லவேண்டும். நம்ப மாட்டீங்க. தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனதும் திட்டமிடாத ஒன்றுதான். என் வாழ்க்கையில் பெரும்பாலும் இப்படியான திட்டமிடாதவைகள்தான் என்னை நகர்த்திச் செல்கின்றன.
மகாகவி இதழ் தொடங்குவதற்கு முன்னர் வத்தலகுண்டுவிலிருந்து வதிலை சௌந்தர் Vathilai Soundar அவர்களால் வெளிவந்த “சுப்பிரமணிய சிவா” இதழில் எனது முதல் கவிதை வெளியானது. இந்த சுப்பிரமணிய சிவா இதழின் அட்டையில் “தாஸ்னா உறுப்பிதழ்” எனப் பொறிக்கப் பட்டிருக்கும். அது என்ன தாஸ்னா என்ற ஆர்வம் மேலோங்க இதழாசிரியரிடம் கேட்டேன். “தாஸ்னா என்றால் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் என்றார். நான் அந்த அமைப்பில் உறுப்பினர்” என்றார். எனக்குப் புரியவில்லை. “சார் தாஸ்னா என்பது பொருந்தலையே” என்றேன். “அது ஆங்கிலச் சொல். Tamil Small News Pappers Association என்பதன் சுருக்கப் பெயர் அதாவது TASNA” என்றார். இப்படித்தான் எனக்கு இந்த அமைப்பு அறிமுகமானது. அப்படிப்பட்ட சங்க உறுப்பிதழில் எழுவதே பெருமையாக இருந்த காலம் அது. அதன் பின்னர் அந்த இதழில் தொடர்ந்து எழுதி வந்தேன்.
ஒருவிசயம் சொல்ல மறந்துட்டேன். பின்னாளில் மகாகவி என்றொரு சிற்றிதழ் தொடங்குவேன் எனக் கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை. என் ஆசையெல்லாம் உள்ளூரில் ஓர் இலக்கிய அமைப்பு தொடங்கணும் என்பதுதான்.
அந்த ஆசைக்கு நீரூற்றி தழைக்கச் செய்ததும் இதே சுப்பிரமணிய சிவா இலக்கிய இதழ்தான்..
“சிவ சிவ என்றில்லாமல்
சிவாவெனச் சீறிடுவோம்”
– என்பது “சுப்பிரமணிய சிவா” இதழின் முழக்கமாக இருந்தது. அப்புறம் என்ன? பேனாவில் மை நிரப்புவதற்குப் பதிலாக பெட்ரோல் நிரப்பத் தொடங்கினேன். யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் விரைந்தோடியது என் எழுத்து வண்டி.
…. தொடரும்