தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 12 பேரில், 5 பேர் சார்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களின் சட்டத்தரணி ராம்கர்பால் சிங் இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கல், அவர்கள் சார்பில் பரப்புரைகளை மேற்கொள்ளல், விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கல் நோக்கிலான நிதிபரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து இரு அரசியல்வாதிகள் உட்பட 12 பேர் அண்மைய காலங்களில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தடுப்பில் உள்ள எம்.குணசேகரன், ஜீ.சாமிநாதன், எஸ்.சந்துரு, வீ.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.அறிவைந்தன் ஆகியோர் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.