உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் முன்னாள் எம்.எல்.ஏ அத்திக் அகமது, பொலிஸாரால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்த போது அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை தொடர்பாக பொலிஸாரின் காவலில் அவர்கள் இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த மாநிலத்தில் உள்ள தூமங்கஞ்ச் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூன்று பேர் பொலிஸாரிடம் சரண் அடைந்துள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை (ஏப்ரல் 15) பின்னிரவு நேரத்தில் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நேரு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.
இருவரது கையிலும் விலங்கு பூட்டப்பட்டு இருந்தது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மருத்துவமனைக்குள் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.
அந்த சமயத்தில்செய்தியாளர்களை போல மைக், கேமரா என கூட்டத்தோடு கூட்டமாக சம்பவ இடத்தில் இருந்த மூன்று பேர் திடீரென தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர்.
தொடர்ந்து அஷ்ரப் அகமதுவையும் சுட்டுள்ளனர். திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால் அங்கு குழுமியிருந்த அனைவரும் பதற்றம் அடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்தக் காட்சி நேரலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.