வடக்கு, கிழக்கு காணிப் பிணக்கு தொடர்பான கூட்டம் பிரதமர் ஹரிணி அமரதுங்க தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இந்த விசேட கூட்டத்தில் விவசாய அமைச்சர் லால் காந்த, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, “வடக்கு, கிழக்கு மக்களின் காணிகள் எந்த வகையிலும் அரசால் கையகப்படுத்தப்படமாட்டாது. அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எமது கொள்கையானது அனைத்து சமூகங்களுக்கும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.” – என்று பிரதமர் ஹரிணி அமரதுங்க தெரிவித்தார்.
எனினும், காணி பற்றிய வர்த்தமானி அறிவித்தலை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.