மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களுடன் சகலதுறை வீரரான தசூன் ஷானக்க, பயணிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
தசூன் ஷானக்க தனது கடவுச்சீட்டை தவறவிட்டதன் காரணமாக விசா வழங்குவதில் எழுந்த சிக்கல் நிலைமை காரணமாகவே அவர் ஏனைய வீரர்களுடன் இணைந்து பயணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட், ஷானகாவின் விசா பிரச்சினையை விரைவில் நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததும் அவர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -669 என்ற விமானத்தில் புறப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் மூலமாக கட்டாரின் தோஹாவைச் சென்றடையும் இலங்கை அணி, அங்கிருந்து மற்றொரு விமானத்தினூடாக மேற்கிந்தியத்தீவுகளை சென்றடையும்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் இலங்கை அணிக்கு தசூன் ஷானக்க, அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.