செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்?

சி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்?

2 minutes read

சி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்: இந்திரா இந்தியாவுக்கு ‘எமெர்ஜென்சி’ அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது?

1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.

பிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண்.

இளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி

எண்: 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார்.

நாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது.

கடுமையான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே இந்திராவின் விருப்பமாக, விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் ‘ஹிட் லிஸ்டில்’ தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இந்திரா, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அச்சமாக தெரிவித்தார்.

பிறகு ஒரு நேர்காணலில் பேசியபோது இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். “இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று கருதினேன். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்று கருதப்பட்ட சித்தார்த் ஷங்கர் ராயுடன் அதுபற்றி ஆலோசித்தேன்”.

இந்த விடயத்தில் தனது சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலேவுடன் அவர் ஆலோசனை கலக்கவில்லை என்பதுதான் வியப்புக்குரிய தகவல்! தனது அமைச்சரவை சகாக்களுடனும் பிரதமர் விவாதிக்கவில்லை.

அரசியலமைப்பு நிலையை சற்று தெளிவாக அலசி ஆராய அவகாசம் கொடுங்கள் என்று சித்தார்த் ராய் இந்திராவிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்.

இந்திராவின் வீட்டில் இருந்து திரும்பிய ராய், இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்கச் சென்றார்.

உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்று இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கினார்.

எமர்ஜென்சியை பிரகடனம் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் இந்த செய்தியை வைக்க விரும்பவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார் இந்திரா.

அமைச்சரவையை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார் சித்தார்த் ராய்.

நெருக்கடி நிலை தொடர்பான முன்மொழிவை குடியரசுத் தலைவரிடம் வழங்குமாறு இந்திரா காந்தி சித்தார்த் ஷங்கர் ராயிடம் கூறினார்.

இதுபற்றி கேதரின் பிராங்க் ”இந்திரா’ என்ற தனது புத்தகத்தில் கூறுகிறார், ‘இந்திராவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், நான் மேற்கு வங்க மாநில முதலமைச்சர், இந்தியப் பிரதமர் அல்ல’ என்று கூறிவிட்டார்.

ஆனால், குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும்போது இந்திராவுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மாலை ஐந்தரை மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்கள்.

குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதிடம் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்தக்கோரும் கடிதத்தை அனுப்புமாறு ஃபக்ருதீன் அலி இந்திராவிடம் கூறினார்.

இந்திராவுடன், சித்தார்த்தா ராயும் சப்தர்ஜங் சாலையில் இருந்த இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது இருள் கவிந்துவிட்டது. இந்திராவின் செயலாளர் பி.என் தர்ரிடம் தகவலை சுருக்கமாகச் சொன்னார் சித்தார்த்.

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை கோரும் முன்மொழிவு தட்டச்சு செய்பவரிடம் சொல்லப்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள், தேவையான தகவல்கள் இணைக்கப்பட்டு கோப்புகளாய் தயாராகின.

பிரதமரின் பிரதிநிதியாக எமர்ஜென்சி நிலையை அறிவிக்க கோரும் கோப்பை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார் ஆர்.கே. தவண்.

காலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

அமைச்சரவை கூட்டத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேருமாறு அடுத்த நாள் காலை 5 மணிக்கு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்குமாறு இந்திராகாந்தி உத்தரவிட்டார்.

இதை இந்திரா காந்தி சொல்லும்போது ஏற்கனவே நள்ளிரவு ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் சித்தார்த் ஷங்கர் ராய் அங்கேயே இருந்தார்.

அடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றவேண்டிய உரையை அவருடன் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தார் சித்தார்த்.

அவர்கள் இருவரும் இருந்த அறைக்கு இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி அடிக்கடி வந்துசென்றார். ஓரிரு முறை இந்திராவை அறைக்கு வெளியே அழைத்து தனியாக 10-15 நிமிடங்கள் பேசினார் சஞ்சய் காந்தி.

தவணின் அறையில் அமர்ந்து ஓம் மெஹ்தா மற்றும் சஞ்சய் காந்தியும், கைது செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த பட்டியலைப் பற்றி பேசவும், ஒப்புதல் வாங்கவுமே சஞ்சய் அடிக்கடி தாயின் அறைக்கு வந்து சென்றார்.

நன்றி – naddunadappu

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.