இந்தியா – புதுச்சேரி, அரச துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிச்சலுகை அறிவிப்பை, புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக வெளியிட்டனர்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அரசாணையில் வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
மாதத்தின் 3 வெள்ளிக்கிழமைகள் இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்தச் சலுகை பெறக்கூடாது.
இந்த நேர சலுகை இன்று (05) முதல் அமலுக்கு வருகிறது.
இதனிடையே, நேர சலுகை பெண் அடிமைதனத்தை ஊக்குவிப்பதாக தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விசனம் தெரிவித்துள்ளனர்.