அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மகன், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் இவ்வாறு இங்கிலாந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, கவுன்சிலராகி சாதனை படைத்துள்ளார்.
இவரது தந்தை குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா சுப்ரமணியன் ஆவர். அவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது, குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
அவரது மூத்த மகனான வெற்றியழகன், பொறியியல் பட்டதாரி ஆவார். லண்டனில் பணிபுரிந்து வரும் அவர், கடந்த 15 வருடங்களாக குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.
இங்கிலாந்து குடியுரிமை பெற்ற வெற்றியழகன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.
இது மிகவும் மகிழ்சியளிப்பதாக அவரது தந்தை பாப்பா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.