எத்தியோப்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்து எரித்திரியா 1991ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
தற்போது எரித்திரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடான சுவீடனில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் ஆப்பிரிக்க கலாசாரத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கலாசார விழா கொண்டாடுகின்றனர்.
அதன்படி, சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கலாசார விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் பொலிஸார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அங்கு தடியடி நடத்திய பொலிஸார், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை கைது செய்தனர்.