அமெரிக்காவில் வலசாரி அரசியல்வாதி சார்லி கிர்க்கின் (Charlie Kirk) படுகொலைக்குக் காரணமானவர் என்ற சந்தேகத்தில், யூட்டா பல்கலைக்கழக மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
22 வயதுடைய டைலர் ராபின்சன் எனும் யூட்டா மாநிலத்தை பூர்வியமாக கொண்ட மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எனினும், ராபின்சன் இசையில் நாட்டமுடைய சாதாரண மாணவர் என்று சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அண்மை ஆண்டுகளில் அவர் அரசியல் விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டியதாக அவரது குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளனர்.
ராபின்சனுக்கு இதுவரை குற்றம் புரிந்த பின்னணி எதுவும் இல்லை என நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : டிரம்புக்கு நெருக்கமானவர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சுட்டுக்கொலை!
கிர்க்கின் கொலைக்குப் பின் வெளியான சந்தேகநபரின் நிழற்படங்களில் இருப்பது ராபின்சன் தான் என அவரது தந்தை அடையாளம் கண்டதாகக் கூறப்பட்டது. முதலில் பொலிஸாரிடம் சரணடைய மறுத்த அவர், தந்தையின் வற்புறுத்தலுக்குப் பின் சரண் அடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிர்க் சுடப்பட்ட பிறகு ராபின்சன் தப்பிச் சென்றதாக நம்பப்படும் வீதியில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், சந்தேகிக்கப்படும் நபர் மீது நாளை மறுநாள் (16) குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கிர்க்கின் கொலை குறித்து கேலியாகக் கருத்துரைத்த 15 பேர் அமெரிக்காவில் வேலையில் இருந்து தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்பட்டுள்ளனர்.
கிர்க்கிற்கு மரியாதையுடன் இரங்கல் செலுத்தாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று குடியரசுக் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
