பங்களாதேஷில் உள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையிலும், அருகிலுள்ள இரசாயனக் கிடங்கிலும் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை இயக்குநர் தாஜுல் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்தார்.
“ஆடைத் தொழிற்சாலையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் இருந்து பதினாறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
தலைநகர் டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் நண்பகலில் தீ விபத்து ஏற்பட்டது, பின்னர் ப்ளீச்சிங் பவுடர், பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை சேமித்து வைக்கும் ஒரு ரசாயனக் கிடங்கிற்கு பரவியதாக தீயணைப்புத் துறை அதிகாரி தல்ஹா பின் ஜாஷிம் தெரிவித்தார்.
கிடங்கில் தீ தொடர்ந்த போதிலும், கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவதற்காக ஒன்றுகூடினர், சிலர் புகைப்படங்களை ஏந்திக் கொண்டிருந்தனர்.
தொழிற்சாலையின் உரிமையாளர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று சவுத்ரி கூறினார். “பொலிஸார் மற்றும் இராணுவம் அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றன,” என்றும் ஆடைத் தொழிற்சாலைக்கோ அல்லது ரசாயனக் கிடங்கிற்கோ ஒப்புதல் அல்லது எந்த தீ பாதுகாப்புத் திட்டமும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
ஆரம்ப கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஆடைத் தொழிற்சாலையில் கிரில் செய்யப்பட்ட கதவுடன் கூடிய தகர கூரை இருந்தது, அது பூட்டப்பட்டிருந்தது என்று அவர் கூறினார்.
“இரசாயன வெடிப்பு காரணமாக நச்சு வாயு வெளியிடப்பட்டது, இதனால் பலர் மயக்கமடைந்து உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களால் தப்பிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மோசமாக எரிக்கப்பட்டுள்ளனர், டிஎன்ஏ சோதனை மட்டுமே அவர்களை அடையாளம் காண ஒரே வழி” என்று அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களை விசாரித்து ஆதரிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

