சவுத்தாம்ப்டனில் (Southampton) 18 வயது மாணவன் ஹென்றி நோவாக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
கடந்த 2025 டிசெம்பர் மாதம், ஹென்றி நோவாக் தனது தங்குமிடத்திற்கு நடந்து சென்றபோது, 23 வயதான விக்ரம் திக்வா என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார். திக்வாவிற்கு கடந்த திங்களன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின்போது, திக்வா தான் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாகப் பொய் கூறியதால், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹென்றிக்கு பொலிஸார் விலங்கிட்டனர்.
சமீபத்தில் வெளியான பொலிஸாரின் உடல் கேமரா (Body cam) காட்சிகளில், விலங்கிடப்பட்ட நிலையில் ஹென்றி “என்னால் சுவாசிக்க முடியவில்லை” (I can’t breathe) என்று பலமுறை கூறுவது பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி – மரணப் படுக்கையிலும் விலங்கிடப்பட்ட மாணவன்: ஹென்றி கொலை வழக்கும் பொலிஸாரின் அநீதியும்!
சவுத்தாம்ப்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடி முதலில் போராட்டத்தைத் தொடங்கினர். பின்னர் இந்தப் போராட்டம், கொலையாளி விக்ரம் திக்வாவின் குடும்பத்தினர் வசிக்கும் செயின்ட் டெனிஸ் (St Denys) பகுதிக்கு நகர்ந்தது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கலகத் தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் மீது போராட்டக்காரர்கள் நாற்காலிகள், கேன்கள் மற்றும் பட்டாசுகளை வீசித் தாக்கினர். இதனால் பொலிஸார் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் அரசியல் செயல்பாட்டாளர் டாமி ராபின்சனும் (Tommy Robinson) கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்தத் துயரத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
பொலிஸின் செயல்பாடுகள் குறித்து “தீவிரமான கேள்விகள்” எழுந்துள்ளதாக பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
தமது மகனின் மரணத்தைப் பிரிவினையையோ, வெறுப்பையோ தூண்டுவதற்குப் பயன்படுத்த வேண்டாம் என்று ஹென்றியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பொலிஸாரின் அணுகுமுறை குறித்து சுதந்திரமான விசாரணை (Independent Office for Police Conduct) நடைபெற்று வருகிறது.
