சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மாணவன் ஹென்றி நோவாக் (வயது 18) கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, பொலிஸார் அவருக்கு விலங்கிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025இல் நடந்த இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியான 23 வயது விக்ரம் திக்வாவிற்கு (Vickrum Digwa) குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் திக்வா தான் ஒரு இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாகக் பொலிஸாரிடம் பொய் கூறினார். இதை நம்பிய பொலிஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் தரையில் கிடந்த ஹென்றி நோவாக்கிற்கு கைவிலங்கு பூட்டினர். ஹென்றியின் முதுகில் இரண்டு இடங்களிலும், இதயத்தில் ஒரு இடத்திலும் பலமான கத்திகுத்துக் காயங்கள் இருந்தன.
வெளியாகியுள்ள உடல் கேமரா (Bodycam) காட்சிகளில், ஹென்றி “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று 09 முறை பொலிஸாரிடம் கெஞ்சுவது பதிவாகியுள்ளது. மேலும் தான் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும் அவர் பலமுறை கூறியுள்ளார்.
ஆனால், அங்கிருந்த ஒரு பொலிஸ் அதிகாரி, “உனக்கு எதுவும் ஆகவில்லை” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். மற்றொரு பொலிஸ், ஹென்றிக்குச் சுவாசம் நின்று மயக்கமடைந்த நிலையிலும், அவரைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறி கைது செய்துள்ளார்.
தனது மகன் “கண்ணியமான முறையில் இறக்கவில்லை” என்றும், பொலிஸாரின் நடத்தை “மனிதாபிமானமற்றது மற்றும் இழிவானது” என்றும் ஹென்றியின் தந்தை மார்க் தெரிவித்துள்ளார்.
ஹென்றி உயிரிழப்பதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்புதான் அவருக்கு முதலுதவி (CPR) வழங்கப்பட்டதாக பொலிஸார் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளனர்.
கொலையாளி விக்ரம் திக்வாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர் 21 ஆண்டுகள் சிறைத் தண்ணடைக்குப் பிறகு பிணையில் வர வாய்ப்புள்ளது. இந்தத் தண்டனை மிகவும் குறைவானது என்ற புகார்கள் எழுந்ததை அடுத்து, அட்டார்னி ஜெனரல் அலுவலகம் இதனை மறுபரிசீலனை செய்து வருகிறது.
அதேவேளை, மாணவனின் இந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்ட 21 செ.மீ நீளமுள்ள கத்தி, சீக்கிய மதச் சடங்குகளுக்கான ‘கிர்பான்’ (Kirpan) அல்ல என்றும், அது ஒரு ஆயுதம் என்றும் சீக்கிய சமூகம் தெளிவுபடுத்தியுள்ளது. திக்வாவின் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள சீக்கிய அமைப்புகள், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
பொலிஸாரின் செயல்பாடுகள் குறித்து ‘சுயாதீன பொலிஸ் நடத்தை அலுவலகம்’ (IOPC) தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மூலம் – பிபிசி