இங்கிலாந்தில் போலி திருமணச் சான்றிதழ்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத குடியேற்ற மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, கடந்த ஆறு ஆண்டுகளாக திட்டமிட்ட முறையில் இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அதிகாரிள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் அதிகாலை அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விசாரணைகளில், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் அமல்படுத்தப்பட்ட EU Settlement Scheme திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மோசடியில், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கும் இடையே போலித் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சட்டரீதியான குடியேற்ற அனுமதி இல்லாத நபர்கள் இங்கிலாந்தில் தங்குவதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பெரும்பாலான Albania நாட்டைச் சேர்ந்த குடியேறிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட குடியேற்ற புலனாய்வு பிரிவைச் சேர்ந்த Andrew Radcliffe, இந்த மோசடி நடவடிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றதாகவும், மிகவும் சிக்கலான வகையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கில் போலியாக தயாரிக்கப்பட்ட சைப்ரஸ் திருமணச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி ஆவணங்கள் மூலம் இங்கிலாந்தில் தங்குவதற்கான உரிமையைப் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் குடியேற்ற விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக தங்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை முக்கியமான எச்சரிக்கையாக அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.