பிரான்ஸில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, சில பகுதிகளில் பொது நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் வெப்பநிலையைத் தொடர்ந்து, பிரான்ஸின் பல பிராந்தியங்களுக்கு உயர் மட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மேற்குப் பகுதிகளிலிருந்து பரிஸ் மற்றும் பர்கண்டி (Burgundy) பகுதிகள் வரை வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அது 41 டிகிரி செல்சியஸை எட்டும் வாய்ப்பும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை அடுத்து, பிரான்ஸ் அரசாங்கம் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில், வருடாந்திர Fête de la Musique இசை நிகழ்வுகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளின் போது, மதுபானம் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடும் வெப்பத்திலிருந்து மக்கள் ஓய்வு பெறும் வகையில், பாரிஸ் நகரில் உள்ள சில பூங்காக்கள் 24 மணி நேரமும் திறந்திருக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் அருந்துதல், தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்த்தல் மற்றும் உடல்நல பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றுதல் அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.