செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் வரி செலுத்துவோரின் சுமையை குறைக்க புகலிட கோரிக்கையாளர்களுக்கு புதிய சீர்திருத்தங்கள்!

இங்கிலாந்தில் வரி செலுத்துவோரின் சுமையை குறைக்க புகலிட கோரிக்கையாளர்களுக்கு புதிய சீர்திருத்தங்கள்!

2 minutes read

இங்கிலாந்தில் தஞ்சம் கோரப்பட்டவர்கள், குடியமர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவதற்கு முன்பு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசாங்கத்திற்குச் சுமார் 10,000 பவுண்ட்ஸ் செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர்.

இங்கிலாந்து அரசியலில் குடிவரவு மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த விடயம் வாக்காளர்களின் முதன்மையான கவலைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின்படி, திருப்பிச் செலுத்தும் தொகையானது வருமானத்தின் அடிப்படையில் சோதிக்கப்படும் என்றும், ஒரு குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

மக்கள் கடும் வறுமைக்குத் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், அந்த வரம்பு மற்றும் அமலாக்க வழிமுறை குறித்த முக்கிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

விதிகள் பின்னோக்கிச் செயல்படுத்தப்படாது எனவும், குழந்தைகள் இந்தக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தஞ்சம் கோரும் ஆதரவைப் பெறுவது ஒரு உரிமை, ஆனால் அது ஒரு பொறுப்பும்கூட,” என்று உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

“இங்கிலாந்து மக்களின் பெருந்தன்மைக்கு மக்கள் பங்களித்து கைம்மாறு செய்ய முடிந்தால், அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

தனது சமீபத்திய சீர்திருத்தங்கள் வரி செலுத்துவோரின் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவுவும் உள்துறை செயலாளர் மஹ்மூத் விளக்கமளித்தார்.

ஆண்டுதோறும் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் சட்டப்பூர்வமாக வசிப்பதற்கு உரிமை இல்லாத மேலும் 45,000 பேரையும், வெளிநாட்டுக் குற்றவாளிகளையும் வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கடந்த வார இறுதியில் தெரிவித்திருந்தது.

நைஜல் ஃபராஜின் ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கில், மிதவாத-இடதுசாரி தொழிலாளர் கட்சியானது சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகரித்துள்ளது.

அக்கட்சியானது, 600,000 வரையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் கோரிக்கைகள் அல்லது மேல்முறையீடுகள் தோல்வியடைந்த பிறரை நாடு கடத்துவதாக அறிவித்துள்ளது.

“பெருந்திரளான இடம்பெயர்வு இந்த நாட்டை, குறிப்பாக நமது பல நகரங்களை, அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றியுள்ளது,” என்று ஃபாரேஜ் கடந்த வாரம் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், அகதிகள் நல ஆர்வலர்களும் இடம்பெயர்வு ஆய்வாளர்களும் இந்த முன்மொழிவை விமர்சித்துள்ளனர்.

இது, துன்புறுத்தலில் இருந்து தப்பி வந்தவர்களைத் தண்டிப்பதாக அமையக்கூடும் என்றும், முன்மொழியப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பல அகதிகள் போதுமான அளவு சம்பாதிப்பார்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், திருப்பிச் செலுத்துவதைக் குடியேற்றத்துடன் இணைப்பது, இங்கிலாந்தில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் மக்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

தனது குடியேற்றக் கொள்கை எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தொழிலாளர் கட்சிக்குள் உட்கட்சிப் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், அதன் தலைவரும் பிரதமருமான கெய்ர் ஸ்டார்மர் கடந்த வாரம் தாம் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அக்கட்சி மேலும் ஒரு ஒட்டுமொத்த நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.