இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் ஒவ்வாமை (Allergy) பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘பெனடிக்ட் சட்டம்’ (Benedict’s Law) தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு லிங்கன்ஷையரில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலையில், பசுப்பால் ஒவ்வாமை காரணமாக ஐந்து வயது சிறுவன் பெனடிக்ட் பிளைத் உயிரிழந்தான். அவனது பெற்றோரின் தொடர் போராட்டத்தின் விளைவாக, பாடசாலைகளில் ஒவ்வாமை பாதுகாப்பை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் உயிர் காக்கும் ஒவ்வாமை பேனாக்கள் (Allergy pens) இருப்பு வைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலையும் ஒட்டுமொத்தப் பாடசாலைகளுக்கான ஒவ்வாமைக் கொள்கையை (Allergy policy) உருவாக்க வேண்டும் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஒவ்வாமை பாதிப்புள்ள மாணவர்களுக்கு எனத் தனிப்பட்ட சுகாதாரத் திட்டங்களை (Individual healthcare plans) பாடசாலைகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றன.
2027ஆம் ஆண்டு முதல், இம்மாற்றங்கள் அரசுப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் சிறப்புப் பாடசாலைகள் என அனைத்துக்கும் சட்டப்பூர்வ கடமையாக (Statutory duties) மாற்றப்படும். இதன்மூலம் இந்த மாற்றங்களைச் செயல்படுத்துவது சட்டப்படி கட்டாயமாக்கப்படும்.
பெனடிக்ட் பிளைத் அறக்கட்டளையின் ஆய்வின்படி, இங்கிலாந்தில் உள்ள 50% பாடசாலைகளில் கூடுதல் மருந்துகள் கையிருப்பில் இல்லை என்பதும், சுமார் 70% பாடசாலைகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம், கல்வி முறை முன்பை விடப் பாதுகாப்பானதாக மாறும் என்றும், அவசர காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை பாடசாலை ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்றும் பெனடிக்டின் தாய் ஹெலன் பிளைத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் ஒலிவியா பெய்லியும் இந்த மாற்றத்தைப் பாராட்டியுள்ளார்.