இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பாரம்பரியத்தையும், அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய வாக்கெடுப்பாக அமையவிருக்கும் பொதுத்தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டின் (Knesset) 04 ஆண்டுகாலப் பதவிக்காலம் இந்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பூர்வமாக தேர்தலை நடத்தக்கூடிய கடைசி வாய்ப்பாக இந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களுக்குப் பிறகு, ஒரு அரசாங்கம் தனது முழுமையான 4 ஆண்டுகாலப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்து, திட்டமிட்டபடி தேர்தலைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
இருப்பினும், தற்போதைய கருத்துக்கணிப்புகள் நெதன்யாகுவுக்கு கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. அவரது ‘லிகுட்’ (Likud) கட்சிக்கான மக்கள் ஆதரவு சரிந்து வருவதால், நாடாளுமன்றத்தில் அது மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
காசா, லெபனான் மற்றும் ஈரானுடனான போர்களை நெதன்யாகு கையாண்ட விதம் குறித்தும், 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய கொடூரமான தாக்குதலைத் தடுக்கத் தவறிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் இஸ்ரேலின் பல்வேறு அரசியல் தரப்பிலிருந்தும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
தற்போதும் லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் தொழில்நுட்ப ரீதியாக நடைமுறையில் இருந்தாலும், இஸ்ரேலியப் படைகள் அங்குள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலேயே தொடர்ந்து தங்கியுள்ளன.
மறுபுறம், இப்பிராந்தியத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பை பலப்படுத்தியவர் நெதன்யாகு தான் என்றும், யூத அரசுக்கு எதிராக எழுந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க அவர் ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
காசாவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், உள்நாட்டு நீதிமன்றங்களிலும் அவர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.