வேல்ஸில் வசிக்கும் மெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) கால பெண்கள், தேசிய சுகாதார சேவை (NHS) மூலமாக டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹார்மோனைப் பெறுவதில் உள்ள கடுமையான நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, ஆன்லைன் மருந்தகங்களில் தங்களை ஆண்கள் என்று பொய் விவரங்களைக் கூறி, இந்த ஹார்மோனை வாங்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி – Menopause பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
இதனால் தகுந்த மருத்துவக் கண்காணிப்பின்றிப் பெண்கள் ஆபத்தான முறையில் அதிக அளவிலான ஹார்மோன்களைப் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது?
பொதுவாக, மாதவிடாய் நின்ற பிறகு ஏனைய வகை ஹார்மோன் மாற்று சிகிச்சைகளை எடுத்துக் கொண்ட பிறகும் உடலுறவு வேட்கைக் குறைவு (low libido) போன்ற அறிகுறிகளால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த ஹார்மோன் உடலுறவு வேட்கையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களின் உடல் ஆற்றல் மற்றும் அறிவாற்றல் திறனையும் மேம்படுத்துவதாகப் பல பெண்கள் அனுபவப்பூர்வமாகக் கூறுகின்றனர்.
தற்போது வேல்ஸில் இது தொடர்பான கூடுதல் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், வேல்ஸின் முதன்மைச் சுகாதாரப் பிரிவிலிருந்து டெஸ்டோஸ்டிரோன் பரிந்துரைக்கான தேவைகளும் மருத்துவப் பரிந்துரைக்கான கோரிக்கைகளும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.
இணையாடாழனட மருத்துவக் கண்காணிப்பு இன்றி இந்த மருந்துகளை வாங்கும் பெண்கள், தங்களுக்குப் பாதுகாப்பான அளவை விட 12 மடங்கு அதிகமான அளவில் ஹார்மோனைப் பயன்படுத்துவதை தான் கண்டறிந்துள்ளதாக மெனோபாஸ் நிபுணரான டொக்டர் மிச்செல் ஓல்வர் (Dr. Michelle Olver) தெரிவித்துள்ளார்.
பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை உடலியல் ரீதியாகப் பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், அது மிக அதிகமாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
அளவுக்கு அதிகமாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பு இன்றியும் இந்த ஹார்மோனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் தலைமுடி வழுக்கை விழுதல் (Baldness), குரல் தடிமனாவது (Deepening of the voice) மற்றும் பாலியல் உறுப்பு (clitoris) பெரிதாவது உள்ளிட்ட நிரந்தரப் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கிறார்.
தற்போது இங்கிலாந்தில் பெண்களுக்குப் பயன்படுத்துவதற்கான பிரத்யேக டெஸ்டோஸ்டிரோன் மருந்துக்கு NHSஇல் உரிமம் இல்லை. இதனால் ஆண்களுக்கான மருந்தே மிகக் குறைந்த அளவில் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
பல்வேறு சுகாதார வாரியங்களுக்கு இடையே இந்த மருந்தை அணுகுவதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இது ஒரு ‘போஸ்ட்கோடு லாட்டரி’ (Postcode lottery) போல வசிக்கும் பகுதியைச் சார்ந்து மாறுபடுகிறது என மருத்துவர் ரெபெக்கா டாம்லின்சன் (Dr. Rebeccah Tomlinson) விளக்குகிறார்.
குடும்ப மருத்துவர்கள் (GPs) இந்த மருந்தை எழுதத் தயங்குகின்றனர் அல்லது வாரியத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக நிபுணர்கள் மட்டுமே இதை எழுத முடியும் என்ற விதி உள்ளது. இதனால் பெண்கள் மகளிர் மருத்துவ (gynaecology) காத்திருப்புப் பட்டியல்களில் நீண்ட காலம் முடங்கும் சூழல் ஏற்படுகிறது.
மேலும், வேல்ஸிலுள்ள ஏழு சுகாதார வாரியங்களும் இந்த மருந்தை எழுத வெவ்வேறு ‘டிராஃபிக் லைட்’ (Traffic light) முறையைப் பின்பற்றுகின்றன. சில வாரியங்களில் ‘சிகப்பு’ குறியீடு இருந்தால், அங்கு நிபுணர்கள் மட்டுமே பரிந்துரைக்க முடியும். ‘மஞ்சள்’ குறியீடு இருந்தால், மருத்துவமனை நிபுணரின் ஒப்புதலுடன் குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
ஒரு நோயாளி தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கையில், அவர் தனது வசிப்பிடத்தை மாற்றியபோது புதிய பகுதியிலிருந்த மருத்துவர் மருந்துச் சீட்டு வழங்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். இதனால் வேறு வழியின்றி தனியாரிடம் அதிக கட்டணம் செலுத்திப் பரிசோதனை செய்து, பின்னர் ஆன்லைன் மருந்தகத்தில் தான் ஒரு ஆண் என்று பொய் விவரங்களைக் கூறி, மிகக் குறைந்த விலையில் அவர் மருந்தை வாங்கியுள்ளார்.