வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக என்ற புது கட்சியை தொடங்கியவர் வைகோ. இன்றும் தனது கட்சியில் தனது குடும்பத்தினர் யாரும் பொறுப்புக்கு வரமாட்டார்கள் என்று உறுதியாக கூறிவருகிறார்.
இந் நிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய மதிமுக சார்பில் தேவதானம் நகரில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில், இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழர் நலனுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், வைகோவின் புதல்வர் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக உருவானது. ஆனால் அதே வாரிசுடன் இன்று கூட்டணியே போட்டுள்ளோம். இந் நிலையில் வைகோவின் வாரிசுக்கு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவது தவறில்லை. தொண்டர்களின் முடிவுக்கு வைகோவும் உடன்படும் காலம் வரும் என்று தெரிவித்தார்.