இந்திய பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றியுள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (06) அதிகாலை 5.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி, சிரியாவில் கடந்த பெப்ரவரி 6ம் திகதி 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன், நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது.
தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அண்மையில் ஏற்பட்டன.
இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.
நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதேவேளை, குஜராத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.