இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பொலிஸ் தலைமைப் பண்பு தரம் போதுமானதாக இல்லை என்றும், இதில் ஒரு அடிப்படை சீர்திருத்தம் தேவை என்றும் ஒரு முக்கிய சுயாதீன ஆய்வு எச்சரித்துள்ளது.
‘பொலிஸ் தலைமை ஆணையம்’ (Police Leadership Commission) திங்களன்று வெளியிட்ட இந்த அறிக்கையில், தகுதியான தலைவர்களைக் கண்டறிந்து மேம்படுத்தும் முறை மிகவும் பலவீனமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தலைமை காவலர் (Chief Constable) பதவிகளுக்குப் போட்டியிட தகுதியான நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பொலிஸ் தலைமைத்துவத்தில் ஒரு “அறநெறி சார்ந்த மறுசீரமைப்பு” (ethical reset) தேவை என்று அறிக்கையின் இணை ஆசிரியர் லார்ட் பிளங்கெட் தெரிவித்துள்ளார். தற்போது, 43 பொலிஸ் படைகளில் எட்டு முன்னாள் அல்லது தற்போதைய தலைமை அதிகாரிகள் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகளிடையே குறைந்த மன உறுதி, அதிகப்படியான காகிதப் பணிகள் மற்றும் எதிர்மறையான தலைமைத்துவ கலாச்சாரம் காரணமாக அவர்கள் சோர்வடைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
முன் கள அதிகாரிகளுக்கு போதிய தலைமைத்துவ ஆதரவு இல்லை. தற்போதைய தரவுகளின்படி, முன் கள அதிகாரிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவமே கொண்டவர்கள்.
பதவி உயர்வு முறைகளில் பாரபட்சம் மற்றும் உறவினர்களுக்கு முன்னுரிமை அளித்தல் (nepotism) போன்ற புகார்களும் எழுந்துள்ளன.
பொலிஸ் துறையை மேம்படுத்த ஆணையம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதாவது, தேசியபொலிஸ் துறை தலைமை அகாடமி: சீரான மற்றும் உயர்தர மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க ஒரு தேசிய அகாடமி அமைக்கப்பட வேண்டும்.
அனுபவம் வாய்ந்த முன் கள வீரர்களை அங்கீகரிக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் ‘சீனியர் கான்ஸ்டபிள்’ (Senior Constable) என்ற புதிய பதவி உருவாக்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள “காலாவதியான” தேர்வுக்குப் பதிலாக புதிய சார்ஜென்ட் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அமைச்சர் சாரா ஜோன்ஸ் குறிப்பிடுகையில், இந்தப் பரிந்துரைகள் பொலிஸ் துறையில் தரத்தை உயர்த்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும் என்று கூறினார்.