தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
2015 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளுக்கு சரி அரைவாசி குறைந்த அளவு வாக்குகளையே எமது கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இந்த வாக்கு வீழ்ச்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே பொறுப்பாளியாகவேண்டும்.
ஊடக பேச்சாளர் என்ற பதவியினை வைத்துக் கொண்டு தான்தோண்றித்தனமான கருத்துக்களை வெளியிடுவதும் கருத்துக்களும், அவருடைய செயற்பாடுகளுமேன தேல்விக்கு காரணமாக உள்ளது. இதனை அனைத்து மக்களும் அறிவார்கள்.
சுமந்திரனாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க.வி.விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் போன்றவர்கள் வெளியேறியிருந்தார்கள்.தமிழர் தேசங்களில் புதிய கட்சிகள் உருவாகியுள்ளமைக்கும், மக்களின் பிரிவுகளுக்கும் சுமந்திரன்தான் காரணம். ஒருவர் மட்டும் முடிவுகளை எடுப்பதே கட்சிக்குள் பிளவுபாடுகளை எற்படுவதற்கு காரணமாக உள்ளது.
சுமந்திரனை கட்சியில் இருந்து விலக்கினால் தமிழ் தேசிய கட்சி மட்டுமல்லாமல் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு ஏற்படும்.தமிழரசு கட்சியை மருசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இப்போது உள்ளோம். இதனால் கட்சியின் தலைவரை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றார்.