செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய மேயர் தெரிவுக்கு எதிராக நீதிமன்றை நாடும் மணி!

புதிய மேயர் தெரிவுக்கு எதிராக நீதிமன்றை நாடும் மணி!

1 minutes read

“யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளோம்.”

– இவ்வாறு யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் ‘மான்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊடகங்களிலும் வர்த்தமானி பிரசுரத்திலும் யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் மேயர் தொடர்பில் ஆரம்பம் தொட்டு சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன.

திட்டமிட்ட நோக்கத்துடன் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவரை நியமிக்கவேண்டும் என்கின்ற தேவைப்பாட்டின் அடிப்படையில் யாழ். மாநகர மேயர் தெரிவு இடம்பெற்றிருக்கின்றது என நான் நம்புகின்றேன்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் சட்டவிதிமுறைகளை மீறி சட்டவிரேதமாக அறிவிப்பு வெளியாகிய பின்னர் மேயர் தெரிவு நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றத்தின் சுற்றுநிருபம் ஒன்றில் இரண்டு முறைகள் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து வெல்ல முடியாது பதவி இழந்த ஒருவர் மீண்டும் பதவிக்குப் போட்டியிடக்கூடாது என்று சுற்றுநிரூபம் இருக்கின்றது.

அந்தச் சுற்று நிரூபத்தை மீறி யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆனோல்ட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்னர் உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறிய பின்னர் நிறைவெண் காணாது என உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை ஒத்திவைத்தார். ஆனால், இப்போது மோசடியாக சட்டவிரோதமாக ஆர்னோல்ட் யாழ். மாநகர சபையின் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். இதிலே பெருமளவு இலஞ்ச, ஊழல் இடம்பெற்றிருக்கின்றதே என எண்ணத் தோன்றுகின்றது.

எனவே, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதில் இருந்து அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

இந்தச் சட்டவிரேத செயற்பாடுகள் நடக்கலாம் என்றால் யாழ்ப்பாணத்திலே சட்டங்கள் தேவையில்லை. சட்டப்புத்தகங்களை குப்பையிலே எறிந்து விட்டு இந்த மேயர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வதிலிருந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தயாராகி வருகின்றோம்.

கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு தயாரிக்கும் வேலைப்பளுவால் இயங்கிக் கொண்டிருந்தமையால் சில வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது இந்த வேலைப்பளுக்கள் குறைவடைந்துள்ளன. உடனடியாக நீதிமன்றத்தை நாடி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.