வடமாகாண மக்களாகிய நாம் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி கூறவேண்டும். அவருக்கு வடக்கு மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்- வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பதற்கான கோரிக்கையை வைத்த போது முன்னாள் சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேன மறுப்பின்றி உடனடியாக எமது ஒதுக்கீட்டை கேட்டு 8.5 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கியிருந்தார். அவர் இன்று சுகாதார அமைச்சராக இல்லாவிட்டாலும் எமது மாகாண மக்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம். நானும் இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். என்றார். இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான லிங்கநாதன், ம.தியாகராஜா, சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வைத்திய நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.