புலம்பெயர் அகதிகள் அவலம் கடந்த சில காலமாக தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் வட ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்த அகதிகள் நடுக்கடலில் சிக்கி தவித்து மீட்கப்பட்டனர்.
மால்டா சர்வதேச கடற்பகுதியில், நடுக்கடலில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர்.சிரியா, பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர், ஏப்ரல் 1ம் தேதி கிழக்கு லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி படகில் புறப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தவித்துள்ளனர்.
கடற்பகுதி சீற்றத்துடன் காணப்பட்டதால் தனியார் தொண்டு நிறுவனத்தினர் Geo Barents கப்பல் மூலம் 8 பெண்கள், 30 குழந்தைகள் உட்பட 440 பேரை பத்திரமாக மீட்டனர். கடந்த ஓராண்டில் வட ஆப்பிரிக்காவில் இருந்து 28,000க்கும் மேற்பட்டோர் இத்தாலிக்கு புலம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.