‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அஜித் குமார் நடிப்பில், இறுதியாக வெளிவந்த திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ கடந்த பெப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித்குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி வெளியான இப்படம், இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் பாக்ஸ் ஒபிஸில் கலக்கிவருகிறது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதாவது, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ என்ற தன்னுடைய 3 பாடல்களை அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியுள்ளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.