எரிபொருள் விலைகள் குறைவடைந்தாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய நேற்று புதன்கிழமை (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலைக்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.
இம்முறை டீசலின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது.
இம்முறை பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான இயலுமை கிடையாது. நான்கு மாதங்களுக்கு முன்னர் பஸ் கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் எரிபொருள் கட்டண குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எடுக்க தீர்மானத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.பஸ் கட்டண சூத்திரம் 20 ஆண்டுகளாக அமுலில் உள்ளது.இதற்கு முரணாக எம்மால் செயற்பட முடியாது. டீசலின் விலை 25-30 ரூபா வரையில் குறைக்கப்பட்டிருந்தால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என்றார்.