எங்களை பொறுத்தவரை வடக்கு, கிழக்கை இம்முறையும் தமிழர்கள்தான் ஆளப்போகிறார்கள். ஜே.வி.பி ஒரு தடவை கூட இங்கு ஆள வாய்ப்பில்லை என உறுதிபட தெரிவிக்க விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
விடத்தல் தீவு தூய யோசேவாஸ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (6) தனது வாக்கினை செலுத்திய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே செல்வம் அடைக்கலநாதன் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
எங்களுடைய பிரதேசங்களை நாங்கள்தான் ஆளவேண்டும். வடக்கு, கிழக்கிலே பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை என அனைத்தையும் தமிழர்கள் கைப்பற்றுவார்கள்.
குறிப்பாக, எங்கள் சங்கு சின்னம் ஆட்சியை நிர்ணயிக்கும் நிலையில் இருக்கும்.
தேசியத்தை நேசிக்கும் தமிழ் தரப்புக்களுடன் மாத்திரமே ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும். அந்த வகையில் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஆட்சி தான் நடக்கும். என்.பி.பி யின் ஆட்சி ஒருபோதும் நடக்காது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.