18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதுகாப்பு கருதி போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியிலேயே இரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
தரம்ஷாலா, ஜம்மு நகரிலிருந்து 200 கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தில் உள்ளது. போட்டி நடப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன் ஜம்முவில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறின.
இதேவேளை, இந்தியப் பிரிமியர் லீக் விருதை 5 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “முதலில் தேசம். மற்ற அனைத்துக்கும் காத்திருக்கலாம்” என்று X தளத்தில் குறிப்பிட்டுள்ளது.