நுவரெலியா மாவட்டம், கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை பகுதியில் பஸ் விபத்து இடம்பெற்ற இடத்தில் இன்று வான் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் – இராஜாங்கனை நோக்கிப் பயணித்த வான் ஒன்று, கொத்மலை – இறம்பொடை பகுதியில் அண்மையில் பஸ் விபத்துக்குள்ளான இடத்துக்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்டப் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் காயமடைந்து கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாப் பகுதிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் வழியிலேயே குறித்த வான், வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்தவர்களின் நிலை மிகவும் மோசமாக இல்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் குறித்த வான் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.