வடக்கின் கரையோர பிரதேச காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி பாரிய போராட்டம் நடத்தப்படும் என இலங்கை தமழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வடக்கின் கரையோர பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பலதடைவைகள் இடம்பெயர்ந்த காரணத்தாலும் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்களது காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பழமையான இந்த சட்டம் பிரயோகிக்கப்படக்கூடாது. இந்த வர்த்தமானி பிரசுரம் உடனடியாக மீள பெறவேண்டும் என்று நாங்கள் கூறி இருக்கிறோம்.
அப்படி மே மாதம் 28 ஆம் திகதிக்கு உள்ளே இது மீளப்பெறாவிட்டால், நாங்கள் பாரியதொரு போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராக நடாத்துவோம் என ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். அதன்படி மே மாதம் 29 ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
இது நான் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு கட்சி சார்ந்த நடவடிக்கை என்று எவரும் கருதக்கூடாது. இது எங்களுடைய இருப்பின் மிக முக்கிய கூறாகிய நிலத்தைப் பற்றிய விடயம்.
நிலம் இருந்தால் தான் இனம் தொடர்ந்து இருக்கலாம். ஆகையினாலே இந்த நடவடிக்கைக்கு எதிராக செய்யப்படுகிற போராட்டம் சகலராலும் ஆதரிக்கப்படவேண்டிய போராட்டம். சகல அரசியல் கட்சிகளுக்கும் நான் அன்பாக விடுக்கின்ற ஒரு வேண்டுகோள், இதில் இணைந்து கொள்ளுங்கள்.
இது ஒருவர் எனது கட்சி நடத்துகிற போராட்டமாக கருதாமல் நாங்கள் அனைவரும் இணைந்து செய்கிற போராட்டமாக இருக்க வேண்டும். பொது அமைப்புக்கள், மக்கள், விசேடமாக பாதிக்கப்பட்ட மக்கள் இதில் இணைந்து கொள்ள வேண்டும். ஆகவே அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
ஆகவே, 29 ஆம் திகதி போராட்டம் நடத்துவதற்கான ஆயத்தங்களை நாங்கள் செய்கின்றோம். இது இந்த நாட்டை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கக்கூடிய ஒரு போராட்டமாக இருக்கவேண்டும். ஏனென்றால் இங்கே அரசாங்கம் இப்ப செய்ய நினைத்திருக்கிறது மிக மிக பாரதூரமான விடயம்.
ஆகையினாலே இது எவ்வளவு பாரதூரமானது என்பதை உணர்ந்து சகலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மீண்டும் மீண்டும் நான் அன்பாக கோரிக்கை விடுக்கின்றேன். ” என்றார்.