செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியின் கவனத்தைப் பெற மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் போராட்டம் – பொலிஸார் அராஜகம்!

ஜனாதிபதியின் கவனத்தைப் பெற மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் போராட்டம் – பொலிஸார் அராஜகம்!

1 minutes read

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்றபோது, முதியவர்கள், பெண்கள் என அனைவரையும் மிக மோசமான முறையில் பொலிஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டித் துரத்தியடித்துள்ளனர்.

மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்போது, கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக, மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றனர்.

இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார், வயோதிபர்கள், பெண்கள் என்றும் பாராமல், அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, அந்த மக்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி, பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தள்ளி, தகாத வார்த்தைகளால் பேசித் துரத்தினர்.

அவ்வேளை, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த  ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர்.

மக்களின் காணிகள் மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு, அபிவிருத்திப் பணிகளை தொடங்கிவைக்க மயிலிட்டி பகுதிக்கு சென்றார்.

அவ்வேளை, “எமது காணிகளை விடுவியுங்கள்” என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடாத்த முற்பட்டபோது கடந்த கால அரசாங்கத்தைப் போன்றே, இந்த அரசாங்கத்திலும், பொலிஸார் எம்மிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர்.

மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதற்கு, பொலிஸார் எம்மிடம் நடந்துகொண்ட விடயம் சான்று பகிர்கிறது என காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.