இலங்கையில் அரச நிதியுதவியுடன் இயங்கும் முதலாவது இலவச செயற்கை கருத்தரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் அவர்களுக்கும் ‘கிளி மக்கள்’ அமைப்பினருக்கும் இடையே இலண்டனில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
நெதர்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் அதிநவீன மகப்பேற்று பிரிவு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இங்கு இயங்கும் செயற்கைக் கருத்தரிப்பு நிலையமானது, பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணரான பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் தலைமையிலான யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட துறைசார் குழுவினராலும், கிளிநொச்சி வைத்தியசாலை மருத்துவக் குழுவினராலும் கடந்த ஜூன் மாதம் முதல் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையிலேயே அரச துறையின் கீழ், மக்களுக்கு முற்றிலும் இலவசமாகச் செயற்கை கருத்தரிப்பு சேவைகளை வழங்கும் முதலாவது மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளி மக்கள் அமைப்பின் தலைவர் சிவலிங்கம் துறைவன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வை, அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்திய நிபுணர் ரத்னம் சதானந்தன் ஏற்பாடு செய்திருந்தார். அமைப்பின் ஆளுகை சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை விஜயராஜாவின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, தாயகத்தில் இவ்வாறானதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவ சேவையை முன்னெடுத்து வரும் பேராசிரியர் ரகுராமன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் அனைத்து மருத்துவக் குழுவினருக்கும் கிளி மக்கள் அமைப்பினர் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியராகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் நிபுணராகவும் பணியாற்றும் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமனின் தலைமையிலான இந்தச் சேவை, பல குடும்பங்களின் வாழ்வுக்குக் கைகொடுக்கும்.
