மியான்மர் கடற்கரைப் பகுதியில் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து நிகழ்ந்த இரு பெரிய படகு விபத்துகளில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை (UN) கவலை தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் அகதிகள் முகமை (UNHCR) இணைந்து வெளியிட்ட அறிக்கையில், 500க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற இரு படகுகள் மியான்மர் கடற்கரை அருகே கவிழ்ந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளன.
சுமார் 250 பேருடன் ஜூன் மாத இறுதியில் புறப்பட்ட இந்தப் படகு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்தது.
அத்துடன், சுமார் 280 பேருடன் சென்ற படகு, ஜூலை 8 அன்று மியான்மரின் ஐயயார்வாடி (Ayeyarwady) கடற்கரை அருகே மூழ்கியதாக நம்பப்படுகிறது.
இந்தப் படகுகளில் பயணித்தவர்கள் பெரும்பாலும் மியான்மரின் ரக்கைன் (Rakhine) மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் சிலர் பங்களாதேஷின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) பகுதியில் உள்ள நெரிசலான அகதிகள் முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மியான்மரில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், மனிதநேய நெருக்கடி மற்றும் பங்களாதேஷ் முகாம்களில் நிலவும் போதிய வசதியின்மை போன்ற காரணங்களால், மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இத்தகைய ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர். இவர்களை மனிதக் கடத்தல் கும்பல்கள் பழுதடைந்த படகுகளில் ஏற்றிச் செல்வது, இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.
சமீபத்திய கனமழை, வெள்ளம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடல் பயணங்கள் வழக்கத்தை விட அதிக ஆபத்தானதாக மாறியுள்ளன. இந்த விபத்துகள் உறுதி செய்யப்பட்டால், இந்த ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
இத்தகைய துயரங்களைத் தடுக்க தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று ஐ.நா அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.