செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு | ஜனாதிபதி

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு | ஜனாதிபதி

4 minutes read

அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது என்பதுடன், 9சதவீத  மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 4சதவீதமாக உள்ள மூலதனச் செலவை அதிகரிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டின் மூலதனச் செலவினமாக இரண்டு டிரில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அது சுமார் 40சதவீத  அதிகரிப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், காலி மாவட்ட அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட காலி மாவட்டச் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி

திறைசேரிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாவும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படுவதே எமது எதிர்பார்ப்பு என்று இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினர் கடன் செலுத்த அவசியமற்ற, நிதி ஒழுக்கத்தைக் கொண்ட நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

சர்வதேச அறிக்கைகளில் தற்பொழுது இலங்கைப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் சமூகக் குறியீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், ஒரு காலத்தில் கடன் செலுத்த முடியாத, ஊழலும் சமூகக் குற்றங்களும் நிறைந்த நாடாக சர்வதேச அளவில் பேசப்பட்ட நமது நாடு, இன்று சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஊழல் குறைந்த நாடாக சர்வதேச அளவில் பாராட்டைப்பெற்று வருகிறது.

அரச துறையின் செயல்திறனை மேம்படுத்துவதுடன் மக்கள் வீட்டிலிருந்தவாறே தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு, அரசாங்கம் எதிர்கால வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அரச சேவையில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச துறையை வேலைவாய்ப்புகளை நிரப்பும் இடமாக மாற்றியதன் மூலம் அரச கட்டமைப்பு பாதகமான பொருளாதாரப் பின்விளைவுகளை முகங்கொடுக்க நேரிட்டது என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வெளிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதன் ஊடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும்.

காலி மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், நகரங்கள் என்பன உருவாக்கப்படுவதே தவிர உருவாகுபவை அல்ல என்றும், அதன்படி முறையான திட்டமிடலின் கீழ் காலத்தின் தேவைக்கேற்ப நகரங்களை உருவாக்குவது அவசியமாகும்.

நிறுவனங்களுக்கு இடையே நிலவும் முரண்பாடுகள் காரணமாக சில திட்டங்கள் தாமதமடைந்து வருவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், குறித்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு தேசிய திட்டமொன்றின் பிரகாரம் அனைவரும் செயற்பட வேண்டிய அவசியமாகும்.

இதன்போது மாகாண சபைகளினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன்படி திட்டங்களின் 90 சதவீதமான பௌதிகச் செயற்பாடுகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

கிராமிய வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 122 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 57 திட்டங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்தின் ‘நில செவன’ அலுவலகங்களின் நிர்மாணம் மற்றும் பாடசாலை விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி என்பவற்றுக்காகவும் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவதில் விளையாட்டு மைதானங்களை நிர்மாணிப்பது மட்டும் போதாது எனவும், விளையாட்டை நாளாந்த மக்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு சமூகத்தில் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வேலைத்திட்டம் அவசியமாகும்.

நாட்டில் விளையாட்டுக் கலாசாரத்தை உருவாக்குவது, போதைப்பொருள் அச்சுறுத்தல் போன்ற பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் என்றும், ஒழுக்கமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்காக விளையாட்டுத் துறைக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் ஒதுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும், அந்த நோக்கத்திற்காக ஒரு தேசியத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும், தடுப்புக்காவல் மையங்களிலிருந்து வெளியேறும் பிள்ளைகளின் வீட்டு வசதித் தேவைகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதுடன், அந்தப் பிள்ளைகளுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை விரைவுபடுத்தி, அந்தப் பயனை வழங்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் “Rebuilding Sri Lanka” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், டதித்வா அனர்த்த நிலைமைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இதே நிதி ஆண்டிற்குள்ளேயே செலவிட வேண்டியது அவசியமாகும்

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் காலி மாவட்ட முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், “முழு நாடுமே ஒன்றாக” செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025-10-30 ஆம் திகதி முதல் இதுவரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 12,608 சுற்றிவளைப்புகளின் ஊடாக 119.6 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. மாவட்டத்திற்குள் போதைப்பொருள் வலையமைப்பை முறியடிப்பதில் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மேலும், காலி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், காலி கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்தல், காலி நகரத்தை பொருளாதார வலயமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் மஹமோதரவை நிர்வாக வலயமாக அபிவிருத்தி செய்தல் ஆகியவை அதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

பல பரிமாண வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட சமூ சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சமூக சூழல், மனித வள அபிவிருத்தி மற்றும் விநியோகச் சங்கிலி அணுகுமுறை மற்றும் பாதுகாப்பு என்பவற்றில் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அதன் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக 10 இலட்சம் ரூபா வழங்கும் திட்டம் உட்பட, மாவட்ட மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி இங்கு ஆராய்ந்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை அந்தக் கைதிகளை  மஹமோதர மற்றும் போகம்பறை சிறைச்சாலைகளில் தற்காலிகமாக தடுத்து வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அதனை நிரந்தர சிறைச்சாலைகளாக மாற்றப்படாது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் மஹமோதர சிறைச்சாலை தொடர்பான தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பொலிஸ் நிலையம் மற்றும் தபால் நிலையம் உள்ளிட்ட 18 அரச நிறுவனங்களை மஹமோதர பகுதிக்கு இடமாற்றம் செய்வது,  காலி சிறைச்சாலையை பூஸ்ஸ பகுதியில் நிர்மாணித்தல், ரத்கம குப்பைப் பிரச்சினை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மககொடகந்த, பத்தேகம நீர் வழங்கல் திட்டம், முன்மொழியப்பட்டுள்ள மாபலகம மற்றும் தவலம புதிய கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள் உள்ளிட்ட நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்தும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.

காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் தொழிற்கல்வி பிரதி அமைச்சருமான நலின் ஹேவகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் தென் மாகாண ஆளுநருமான பேராசிரியர் சுசிரிபால மானவடு, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நிஷாந்த சமரவீர, டி.கே. ஜயசுந்தர, நிஷாந்த பெரேரா, திலங்க யூத கமகே, ஹசாரா லியனகே, சானக மாதுகொட, காலி நகரபிதா சுனில் கமகே, பிரதம செயலாளர் சந்திம சி. முஹந்திரம்கே ஆகியோருடன் காலி மாவட்டச் செயலாளர் கே.யூ. சந்திரலால் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதானிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.