கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு புதன்கிழமையுடன் 72 மணி நேரம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. வழக்கமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கு இந்த 72 மணி நேரமே மிக முக்கியமான காலக்கட்டமாகக் கருதப்படுகிறது.
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இந்த நூற்றாண்டில் கொலம்பியாவைத் தாக்கிய மிகக் கடுமையான நிலநடுக்கமாகும். உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 500 பேரைக் காணவில்லை; மேலும் 9,550க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
கொலம்பியாவின் காபி உற்பத்திக் களமாகத் திகழும் பெரேரா (Pereira) பகுதியில் 83 பேரும், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான கலியில் (Cali) 74 பேரும் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
“நாம் மீட்புப் பணியின் இறுதிக்கட்டத்திற்குள் நுழைகிறோம். அதற்காக இனி தப்பிப்பிழைத்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் இனி உயிருடன் மீட்பது மிகவும் கடினம்” என்று கலி நகர மேயர் அலெஜான்ட்ரோ எடர் (Alejandro Eder) புதன்கிழமை தெரிவித்தார்.