”பெரிய படங்கள் எப்போதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் சின்ன படங்கள் தான் ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் சின்ன படமான ‘மொத ராத்திரி’ உங்களை வியக்க வைக்கும்’ என இப்படத்தை இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் வாழ்த்தியிருக்கிறார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் திரைப்படம் ‘மொத ராத்திரி’. இதில் ‘மேட் இன் கொரியா’ புகழ் ரிஷிகாந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சிறை’ தந்த சித்திர தேவதை அனிஷ்மா அனில் குமார் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார் பாரி இளவழகன் கீர்த்தீஸ்வரன், ஸ்ரீ கணேஷ் ஆகிய முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தின் நாயகனான ரிஷிகாந்த் பேசுகையில், ” இத்திரைப்படத்தின் கதையை இயக்குநர் குறும்படமாகத்தான் எம்மிடம் அறிமுகம் செய்தார்.
அதன் பிறகு ஆறு ஆண்டுகள் பயணித்து, இதனை ‘மொத ராத்திரி’ திரைப்படமாக உருவாக்கியுள்ளார். கதை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.
இத்திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.