விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.
எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு மூவர் மட்டுமே அவரைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் தாயாரான சிரந்தி ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (07) முற்பகல் சிறைச்சாலைக்குச் சென்று மகனின் நலன் குறித்து விசாரித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவும் இன்றையதினம் முற்பகல் நாமல் ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காகச் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.