மியன்மாரில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றின் மேம்பாட்டுப் பிரிவில் கே குழுவில் பங்குபற்றிய இலங்கை தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டியது.

புருணை தாருஸ்ஸலாம் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடைபெற்ற போட்டியில் இலங்கை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் கோர்ணர் கிக்குகள் மூலம் பல கோல் போடும் வாய்ப்புகளை இலங்கை உருவாக்கியபோதிலும் அவை சாத்தியப்படவில்லை.
இடைவேளைக்குப் பின்னர் 46ஆவது நிமிடத்தில் டில்பா சித்ர திசும் செனுல உதைத்த பந்தை மொஹமத் சவ்வான் முறையாக தடுக்கத் தவறினார். அவரது கைகளில் பட்டு எகிறி வந்த பந்தை மொஹமத் கதீம் கோலாக்கினார்.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்தில் இரண்டு தடவைகள் பட்டு திரும்பி வந்த பந்தை மொஹமத் மலீக் கொலாக்கி இலங்கையின் கோல் எண்ணிக்கையை 2ஆக உயர்த்தினார்.
இலங்கையின் உள்ளூர் பயிற்றுநர் நீக்கம்
இருபது வயதுக்குட்பட்ட அணியின் உள்ளூர் பயிற்றநர் மொஹமத் இம்ரான் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதன் காரணமாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் பதவி நீக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
அவர் பயிற்றுநராக இருந்த இரண்டு போட்டிகளில் மியன்மாருடனும் மாலைதீவுகளுடனும் இலங்கை தலா 0 – 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
புருணை தாருஸ்ஸலாம் உடனான போட்டியில் உள்ளூர் பயிற்றுநர் பொறுப்பை ஏற்ற உதவிப் பயிற்றுநர் ஒகஸ்டின் ஜோர்ஜ் சிறப்பாக அணியை வழிநடத்தினார்.
மாலைதீவுகளுக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டி முடிவில் மாலைதீவுகள் அணியினரை நோக்கி உள்ளூர் பயிற்றுநர் மொஹமத் இம்ரான் தகாத முறையில் நடந்துகொண்டதுடன் தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார்.
அவரது போதாத நேரம் அவரது நடத்தை வீடியோவில் பதிவாகி வைரலாக பரவியுள்ளது.
இதனை அடுத்து மொஹமத் இம்ரானை உடனடியாக பயிற்றுநர் பதவியிலிருந்து நீக்கியதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.