இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதியினர் முற்றிலும் தனிப்பட்ட குடிமக்களாகவே நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் உத்தியோகபூர்வ குறிப்பாணையை மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ளார்.
அரச மாளிகையின் லோர்ட் சேம்பர்லினால் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணையில், சசெக்ஸ் கோமகன் மற்றும் கோமகள் ஆகியோரின் ‘HRH’ எனும் அரச கௌரவப் பட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் உத்தியோகபூர்வ மற்றும் அரச நிகழ்வுகள் எதிலும் இப்பட்டங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தம்பதியினரால் முன்னெடுக்கப்படும் தொண்டு மற்றும் வணிக ரீதியான செயற்பாடுகள் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து முற்றிலும் தனித்து, அவர்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் இந்த ஆவணத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கான உத்தியோகபூர்வ அரச மரியாதைகள் அல்லது பொது நிதி தொடர்பான அனைத்து விடயங்கள் குறித்தும் பக்கிங்ஹாம் அரண்மனையையே நேரடியாகத் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு, அனைத்து அரச அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.