கனடாவில் வாடகைதாரர் ஒருவர் மாட்டிறைச்சி சமைத்த விவகாரத்தில், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே (Surrey) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள ஒரு குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்த நபர், தனது வீட்டில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரான இந்தியப் பெண், வாடகைதாரரின் அனுமதியின்றி அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாடகைதாரரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் வாடகை ஒப்பந்த விதிகளுக்கும் மாறாக, அந்தப் பெண் வீட்டின் உரிமையைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட வாடகைதாரர் உடனடியாக உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார், வாடகைதாரரின் வீட்டுக்குள்ளேயே வைத்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவர் கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனடா நாட்டின் சட்டப்படி, வாடகைக்கு வீடு எடுத்த பிறகு வாடகைதாரரின் அனுமதியின்றி உரிமையாளரோ அல்லது வேறு நபர்களோ வீட்டுக்குள் நுழைவது மற்றும் அவர்களின் உணவுத் தேர்வுகளில் தலையிடுவது சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.