மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது முடித்துக்காட்டப்பட்ட எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் யாரோ ஒருவர் முடியாது என்று விட்டுச் சென்றதாகத்தான் இருக்கும். எனவே மனிதர்களால் முடியாது என்று எதுவும் இல்லை.
எந்தவொரு தொழில் தொடங்கும் போதும் அதில் அனுபவமும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே நம்மனம் அத்தொழிலில் ஒன்றுபட்டு வெற்றி காணும். எனவே அனுபவமுள்ள தொழிலை தேர்ந்தெடுக்கவேண்டும் அல்லது ஆர்வமுள்ள தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தொழில் தொடங்கும்போது பலரிடம் சென்று யோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். ஆனால் முடிவு நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும். இதில் யோசனை கேட்பவன் மன உறுதி இல்லாதவனாகவோ அல்லது யோசனை சொல்லும் நபர் கூறுவது அனைத்தும் சரி என்று நம்புகிறவனாகவோ இருந்துவிட்டால் அவர் யோசனைப்படியே நம் தொழிலை மாற்றிவிடுவார்.
ஆர்வமற்ற துறையில் அல்லது மற்றவர்கள் சொல் கேட்டு செய்யும் தொழிலில் வெறும் ஆசையை மட்டும் அடித்தளமாகக் கொண்டு செய்து முடிவில் தோல்வி கண்டுவிட்டால் பிறகு நம் மனம் புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவே பயப்படும்.
புதிதாக யாரேனும் யோசனை கூறினாலும் அவர்களைக் கண்டு மனம் அச்சம் கொள்ளும். மேலும் ஆர்வமுள்ள துறையில் ஈடுபட்டு தோல்வியே கண்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதில் வெற்றி பெறவே மனம் தூண்டும் மேலும் வெற்றியும் காணும்.
நாம் ஓரிடத்திற்கு செல்ல நினைத்து நடந்தோ அல்லது வாகனத்திலோ போகிறோம். அப்போது குறுக்குப்பாதை என்று நினைத்து ஏதோ ஒரு பாதையில் சென்று வழி தவறிவிடுகிறோம். உடனே நாம் வழி தவறிவந்துவிட்டோம் என்று வீட்டுக்கா திரும்பி விடுகிறோம்.
சரியான பாதையை தேடி கண்டுபிடித்து சென்றடைய வேண்டிய இடத்தை நோக்கிப் பயணித்துவிடுகிறோம். இதற்கு காரணம் நாம் சென்று சேர வேண்டிய இடத்தை முடிவு செய்துவிட்டோம். போகும் பாதையைத்தான் தெரிந்து கொண்டு சென்று சேர வேண்டும்.
அதுபோல் தொழிலில் வெற்றிகாணத் துடிக்கிறவர்கள் முதலில் தோல்வி கண்டாலும் சோர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி இலக்கை அடைந்துவிடுவார்கள். அவர்கள் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வந்துவிடுவதில்லை பாதையை மாற்றிக் கொண்டு சென்றடைய வேண்டிய இடத்தை தேடி அடைந்ததுபோல், விடாமுயற்சியுடன் வெற்றி காண்பார்கள்.
சிலர் தவறான பாதையில் சென்று மிக எளிதாக வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும்போது நாமும் இந்த வழியில் ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற என்னம் தோன்றுவது இயல்புதான். ஆனால் அப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் வளரவிடக்கூடாது.
நன்றி : தினபூமி
