நாட்டு மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால்தான், எதிர்க்கட்சியினர், வெளிநாடுகளுடன் இணைந்து சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் ஹம்பந்தோட்டை வரையான பகுதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் வெளிவிவகார அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு தற்போது இருக்கின்றது. இதனை மிகவும் இலகுவாக அவிழ்த்து விட முடியாது.
உலகில் எந்தவொரு நாடும் தமது நாட்டுக்கு எதிராக கொண்டு வருகின்ற தீர்மானங்களுக்கு இணை அனுசரனை வழங்குவதில்லை. அதாவது தமது நாட்டுக்கு எதிர்ப்பு வருகின்றபோது எவரேனும் ஒத்துழைப்பு வழங்குவார்களா?
நாமும் அதற்கு ஆதரவு வழங்குவோம், அதனுடன் இணைவோம் என அவர்கள் ஜெனிவாவில் இணை அனுசரனை வழங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் இவ்விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக, அந்த இணை அனுசரனையில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
மேலும் அவர்கள் ஜெனிவா சென்றாலும் இந்த நாட்டு விகாரைகளுக்குள் கூட அனுமதிக்க முடியுமானவர்களா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.