👉 அரியாலை, ஆனைக்கோட்டை, வவுனியாவைச் சேர்ந்தோருக்குத் தொற்று
👉 ஒரே குடும்பத்தில் 6 பேருக்கும் தொற்று
👉 9 மற்றும் 11 வயது சிறுவர்களும் உள்ளடக்கம்
👉 வடக்கில் இதுவரை 15 பேருக்கு தொற்று
அரியாலை பிலதெல்பியா தேவாலய ஆராதனையை நடத்திய சுவிஸ் மத போதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் 8 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. ஆனைக்கோட்டை, வவுனியா மற்றும் அரியாலையைச் சேர்ந்தவர்களே கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
சுவிஸ் மத போதகர் அரியாலையில் தங்கியிருந்த வீட்டின் அருகில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது கடந்த 3ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரேனா தொற்றியுள்ளது நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிலதெல்பியா தேவாலயத்தில் ஊழியம் செய்யும் வவுனியாவைச் சேர்ந்தவருக்கும், வாகனச் சாரதியான ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியாலை பிலதெல்பியா தேவாலயத்தில் கடந்த மாதம் 15ஆம் திகதி ஆராதனை இடம்பெற்றது. இதில் பங்கேற்ற சுவிஸ் மத போதகருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் தனிமையில் உரையாடிய தாவடியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தகாரருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மத போதகருடன் நெருக்கமாக பழகிய 20 பேர் அடையாளப்படுத்தப்பட்டு காங்கேசன்துறையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 23ஆம் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் கடந்த முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். எஞ்சியவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நேற்றுச் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 6 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். மற்றையவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.
அரியாலையைச் சேர்ந்தவர்களில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள், அவரது சகோதரரின் மகன் மற்றும் அவர்களுக்கு தாத்தா முறையிலான உறவினர் என்று 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
சுவிஸ் மத போதகர் அரியாலையில் தங்கியிருந்த வீட்டின் அருகில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 36 வயதான தாய், அவரது 20 வயதான மூத்த மகன் மற்றும் 15 வயதான மூத்த மகள் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தந்தை மற்றும் எஞ்சிய 9 மற்றும் 11 வயதான இரு பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரியாலை பிலதெப்பியா தேவாலயத்தின் அருகிலுள்ள ஒரே வளவினுள் மூன்று வீடுகள் அமைந்துள்ளன. அதில் ஒரு வீட்டில் சுவிஸிலிருந்து வந்த மத போதகர் தங்கியிருந்தார். அருகிலிருந்த வீட்டில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.